அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளிதழான ‘போர்வாள்’ பத்திரிகையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று முறைப்படி வெளியீட்டுத் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நாளிதழின் முதல் பிரதியை அவர் வெளியிட்டார்.
கடந்த காலங்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது அம்மா’ செயல்பட்டு வந்தது. எனினும், கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக, ‘நமது அம்மா’ நாளிதழ் எஸ்பி. வேலுமணி அணியின் வசம் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலப் பணிகளையும் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க ஒரு புதிய நாளிதழின் தேவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாகவே தற்போது இந்த ‘போர்வாள்’ நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.
நாளிதழின் முதல் பக்கத்தில் “மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்; மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பிரதான தலைப்பாக இடம் பெற்றுள்ளது. அதிமுகவின் அரசியல் நகர்வுகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைத் தொண்டர்களுக்கு விளக்கும் வகையில் இந்த நாளிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாளிதழின் முகப்பில் கட்சியின் நிறுவனர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன், எடப்பாடி பழனிசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும் இந்த ‘போர்வாள்’ நாளிதழ் கட்சியின் மிக முக்கிய ஊடக ஆயுதமாகச் செயல்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ‘போர்வாள்’ என்ற பெயரிலேயே வீரியத்துடன் களமிறங்கியுள்ள இந்த நாளிதழ், அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
