மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது அவதுாறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து கெஜ்ரிவால், ஆம் ஆத்மி நிர்வாகிகளான மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது.
இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்து மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் பட்டியலிடப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிபதி விசாரிக்கக் கூடாது என கெஜ்ரிவால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி நிராகரித்த நிலையில், கெஜ்ரிவால் தரப்பினர் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா குறித்து இணையத்தில் அவதுாறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பிய அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, ரவீந்தர் துதேஜா அடங்கிய அமர்வு அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
