திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்குவங்க சட்டசபை தேர்தல் தோல்வியால் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலால் சிதறி வரும் நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.
இதனை தொடர்ந்து, மற்றொரு எம்பியான சுஷ்மிதா தேவ்வும் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், 3வது நபராக எம்பி பிரகாஷ் சிக் பராக் தனது பதவியை ராஜினாமா செய்ததால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரகாஷ் சிக் பராக்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து எம்பிக்களின் எண்ணிக்கை 10ஆக குறைந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் மேலும் 3 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வரை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், இது மம்தா தலைமையிலான கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
