இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்கும் சட்ட மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா சட்டமானால்,இந்தியாவுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்த நிலையிலும் போர் இன்னும் நீடித்துவருகிறது. ரஷ்யா போரைத் தொடர்வதற்கு மற்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை மலிவு விலையில் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்புகிறார். எனவே இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை ட்ரம்ப் விதித்தார்.

தன்னிச்சையாகப் பெரிய அளவில் வரி விதிக்கும் அவசர கால அதிகாரம் அதிபர் ட்ரம்புக்கு இல்லை என்று கூறி, ட்ரம்பின் வரிவிதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது.

இதனையடுத்து, இந்தியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை மட்டுமே புதிய வரிகளை அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026 எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை அதிபர் ட்ரம்ப் தீவிரப்படுத்தினார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அதிபர் ட்ரம்புக்கு முழு அதிகாரம் வழங்குகிறது.

இந்தப் புதிய சட்டம் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனை பலவீனப்படுத்தும் என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுவை உலக அளவில் பிரகடனப்படுத்தும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் கிரஹாமுடன் நீண்டகாலமாக பணியாற்றிய ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல், இந்த நடவடிக்கை இறுதியில் சட்டமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில் செனட் சபையிலும் பிறகு பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்ட பிறகே அதிபர் ட்ரம்பின் கையெழுத்து பெறுவதற்குச் செல்லும். அதிபர் கையெழுத்திட்ட பின் குறிப்பிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்று கூறப் படுகிறது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜன் ஆகிய நாடுகளுக்கு 100 சதவீத வரிவிதிப்பையும், ரஷ்யாவிடமிருந்து நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிப்பையும் இந்த சட்ட மசோதா பரிந்துரை செய்துள்ளது. திருத்தப்பட்ட இந்த சட்ட மசோதா ரஷ்யாவுடன் ஈரானையும் குறிவைதுள்ளது.

ஒவ்வொரு 180 நாட்களுக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வரிகளை மாற்றியமைப்பார் என்றும் இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ரஷ்யாவில் இருந்து 15 சதவீதத்துக்கும் குறைவாக இயற்கை எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து ‘யுரேனியம்’ வாங்கும் அமெரிக்காவுக்கு இந்த சட்ட மசோதாவில் வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் இந்த சட்ட மசோதா தனது வெளியுறவுக் கொள்கைக்கான கருவியாக வரிகளைப் பயன்படுத்தும் ட்ரம்பின் திறனை இன்னும் அதிகமாக விரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே அதிபர் ட்ரம்புக்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்ட மசோதாவை பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவில் உள்ள முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கிரிகோரி மீக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எனவே வரும் செப்டம்பரில் கூடும் பிரதிநிதிகள் சபையில் இந்த சட்ட மசோதா நிறைவேறுமா ? என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

You May Also Like

More From Author