பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி விடுவிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது, விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தை வரும் 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
இதையொட்டி, 3 லட்சத்து 15 ஆயிரத்து 614 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர மிதவை சூரியஒளி மின்சார திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும்,
பிரதமரின் சூர்ய சரோவர் யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த 5,070 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கேலே இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 29 ஆயிரத்து 054 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
84,084 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வளங்களை ஆராய்ச்சி செய்யவும், உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
