ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்ததால் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதுடன், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெயில் அதிகரித்துள்ளதால் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனுமதி வழங்கியுள்ளது. 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி கிடைத்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
