பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை தொடங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுக்கு அந்த தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை.
நாளை தேர்வு தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வராததால் பரிதவிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அங்கீகாரம் இல்லாததால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாது. இந்நிலையில், NIOS திட்டத்தின் கீழ், வேறு பள்ளியில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, இந்த தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாமலேயே 10ம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்து பொதுத்தேர்வு வரை தயார் செய்துள்ளது என்று மாணவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது .இப்பொது, ஹால் டிக்கெட் கிடைக்காமல் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் காத்து நிற்கின்றனர்.