நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை, திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் உள்ள 44 சென்ட் கோயில் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அழகிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, வழக்கில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக்கோரி அழகிரி தரப்பிலும் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி வேல்முருகன், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி அழகிரி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.