மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கெடுபிடிகளையும் தாண்டி, மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று (22.06.2025) முருக பக்தர்கள் மாநாடு பெரும் எழுச்சியுடன் நடைபெறுகிறது.
தமிழகத்தின் கலாச்சாரத் தொன்மையையும், பண்பாடு மற்றும் புராதன அடையாளங்களையும் ஆலயங்களையும் மீட்டெடுக்க உறுதியேற்கும் நிகழ்வு தான் இந்த முருக பக்தர்கள் மாநாடு.
மாநாடு நாளை தான் என்றாலும், கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரண்டுள்ளனர். சித்திரை திருவிழாவைப் போல மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. சமுதாயத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், நமக்கு வழிகாட்டும் மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வந்த வண்ணம் உள்ளனர். நாளை இன்னும் பல லட்சம் பேர் கூட உள்ளனர்.
உலகத்தோர் போற்றும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழ் பரப்புகின்ற விதமாக நடைபெறும் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் புகழை உலகறியச் செய்வோம்.
முருகப் பெருமானின் புகழ் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அசிங்கபடுத்த முயன்ற கறுப்பர் கூட்டத்தை #வேல்_யாத்திரை நடத்தி வேரறுத்தோம். திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்களின் உரிமையை பறிக்கத் துடிக்கும் திமுக அரசுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் உரிய பதிலடி கொடுப்போம். முருக பக்தர்கள் மாநாட்டில் நாளை மாலை ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பல லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கச் செய்வோம்.
மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்திடுமாறு தமிழக மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், தமிழக இந்து மக்களின் உரிமை முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கட்டும்..! அது, சென்னை கோட்டையில் இருப்பவர்களையும் அசைக்கட்டும்..! இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.