கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளார் கண்ணன்,சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் தங்கமுத்து நாடார், துணைத் தலைவர் ரவீந்திரநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டி இளங்கலை பிரிவில் 125 மாணவர்களுக்கும்,
முதுகலை பிரிவில் 20 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பேசியதாவது:
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,கல்லூரி மாணவர்கள் நலன் கருதி 28 ஏக்கர் நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.1996ல் துவங்கிய இக்கல்லூரி அனைத்து சிறப்பு அம்சங்களையும் பெற்று கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தனி முத்திரை பதித்து வருகிறது.பட்டமளிப்பு விழா என்பது கற்றலுக்கான உங்களது உழைப்பின் வெற்றியின் திருவிழாவாகும்.
இம்மகிழ்ச்சியை கொண்டாடும் உங்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காத்திருக்கிறது,ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டால் மறு சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் அப்படி உருவாக்கி அதில் உங்கள் உழைப்பை செலுத்தினால் உலகில் விடை காண முடியாத வினாக்களுக்கும் விடை காண முடியும்.
நம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்கான வழி மட்டுமல்ல அது சமூக மேம்பாட்டுக்கான கருவி,சமூக மேம்பாட்டிற்கு கல்வி பயன்பட வேண்டும்,உங்கள் மீது பெற்றோர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல நானும் நம்பிக்கை வைத்துள்ளேன்,புதியதோர் உலகம் செய்வோம் எனும் புரட்சிக்கவி வாக்கினை மெய்ப்பிக்கும் வேளை வந்துவிட்டது,கல்விதான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரும் சொத்து.சமுதாய வடிவமைப்பில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது,இந்தியாவின் மனிதவளம்,மனித சக்தியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கின்றன,இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர்.65 கோடி இளைய தலைமுறையினர் எந்த நாடுகளிலும் இல்லாததால் இந்தியாவை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன,கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்,படித்த கல்வியுடன் உங்கள் கேரக்டரையும் சரியாக நடத்தினால் வெற்றி நிச்சயம்,கல்வியுடன் திறமையும் புத்திசாலித்தனமும் முக்கியம்,இலக்கினை அடைய தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.
இதில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,சரவணகுமார்,ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி செயலாளர் பாஸ்கர்,உள்பட கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி பொருளாளர் வி.எஸ்.எம் கண்ணன் நன்றி கூறினார்.