கோவை : கோவையில் இன்று (நவம்பர் 11, 2025) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தல் உத்திகள், கூட்டணி வலுவாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், SIR (வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்) எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். “தமிழ்நாடு முழுவதும் SIR-க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு 10 முறை, பிறகு 3 முறை SIR நடந்துள்ளது. அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் கடமை SIR நடத்துவது என்றும் வலியுறுத்தினார்.திமுக ஆட்சியில் இருந்தபோதும், மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோதும் SIR நடந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். “என்ன காரணத்துக்காக இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஆட்சியில் இருந்தபோது SIR தவறாகத் தெரியவில்லையா?” என்று கேட்டார்.
திமுகவின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டினார். மோடிக்கு நற்பெயர் வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தில் திமுக அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவின் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கின்றன என்று வலியுறுத்தினார். SIR எதிர்ப்பு போராட்டங்களை நேரடியாக விமர்சித்த அவர், திமுகவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
