கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், நகர்மன்ற கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக உள்ள பரிதா நவாப் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட விவகாரமே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீர்மானத்தின் போது, தி.மு.க. கவுன்சிலர்களே சேர்மனுக்கு எதிராக வாக்களித்த நிலையில், நாகஜோதி மட்டும் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், நாகஜோதியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சேர்மனுக்கு ஆதரவாக அவர் வாக்களித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
