தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவி தொடர்பான அதிருப்தி காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்து, அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்தச் சூழலில், கடந்த 25-ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள தனது இல்லத்தில், அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், அஜிதா ஆக்னல் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை மேம்பட்டு, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அஜிதா ஆக்னல், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனிடையே, அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“கழகத் தோழர்கள் காட்டிய அன்பும், அவர்களது பிரார்த்தனைகளும் எனக்கு மீண்டும் உற்சாகம் அளித்துள்ளன. மேலும் 2026-ஆம் ஆண்டு விஜய்யை முதல்வராக அமர்த்தும் இலக்கை நோக்கி, முன்பைவிட அதிக உற்சாகத்துடன் களப்பணியாற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
