தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 56 தொகுதிகள் வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 3 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கறாராக நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இவ்வளவு இடங்களை ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அமித்ஷாவின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்று இந்த முக்கியச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் பொதுவாகத் தங்கள் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு அளிப்பதில்லை. ஆனால், தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் தேசியக் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதையே இந்தத் தொகுதிப் பங்கீடு மோதல்கள் காட்டுகின்றன.
