மணிப்பூர் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த யெம்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது கூகி மற்றும் மெய்தி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்த இந்த கலவரத்தை அடுத்து, பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்தாண்டு பிப்ரவரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வரும் 12ம் தேதி குடியரசு தலைவர் ஆட்சி முடிவடைய இருந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இந்நிலையில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி புதன் கிழமை மதியம் திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சராக யெம்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார். நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்,இதில் நெம்சா கிப்ஜென் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பதவியேற்றார்.
