சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தொடரப்பட்ட ரிட் மனு தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN சார்பில், வழக்கை முழுமையாக திரும்பப் பெறுவதற்கான கடிதம் நீதிமன்ற பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், தற்போது மேல்முறையீடு தொடர விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவை (Revising Committee) நேரடியாக அணுகியுள்ளது. சென்சார் போர்டு அளித்த UA சான்றிதழில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் மறு ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தற்போது நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பட வெளியீட்டு பணிகளுக்கு சட்டரீதியான தடை நீக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், இந்த வழக்கு இன்று காலை (பிப்ரவரி 10) நீதியரசி பி.டி. ஆஷா முன்னிலையில் “வழக்கை வாபஸ் பெற” என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால், இன்று நீதிமன்றத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின் வழக்கு முடித்து வைக்கப்படும்.இந்த முடிவு படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. சென்சார் மறு ஆய்வுக் குழுவின் முடிவு எதிர்பார்த்தபடி வருமானால், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரசிகர்களிடையே படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு இப்போது உச்சத்தில் உள்ளது. இந்தத் திருப்பம் தமிழ் சினிமாவில் சென்சார் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதை காட்டுகிறது.
