ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளான கேஸ் மானியம் மற்றும் கல்விக்கடன் ரத்து போன்றவற்றை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அதிமுக கொடுத்த அழுத்தத்தாலேயே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா மற்றும் புயல் காலங்களில் அதிமுக அரசு மக்களுக்குச் செய்த நன்மைகளையும், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மும்முனை மின்சாரத் திட்டங்களையும் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்பட உள்ள அதிரடி கவர்ச்சித் திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் மற்றும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 25,000 ரூபாய் மானியம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், நகரப் பேருந்துகளில் ஆண்களும் இலவசமாகப் பயணம் செய்யலாம், நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ஏழைகளுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் மற்றும் தீபாவளிக்கு பட்டு வேஷ்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் எனப் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
