ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகளே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இந்தப் பள்ளியின் மீது விழுந்தது ஈரானின் சொந்த ஏவுகணையாகத்தான் இருக்க முடியும். அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை. இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. எனவே, அது தவறுதலாக அவர்களின் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். அமெரிக்கா ஒருபோதும் பள்ளி குழந்தைகள் அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்குவதில்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கிடையில், மினாப் பள்ளியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்களின் கட்டமைப்புகளைத் தாக்குவது போர்க்குற்றமாக கருதப்படும் நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து முறையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அமெரிக்க இராணுவம் தனது விசாரணையைத் தொடர்ந்தாலும், தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்த இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

