ஈரானுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு ஆதரவான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் தாம் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை. ஈரானின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பு மற்றும் அதிகாரத்தில் உள்ள தலைமை முற்றிலும் ஒழிக்கப்படும் வரை இந்தப் போர் தொடரும். அதற்குப் பிறகே போர் முடிவுக்கு வரும்” என்று கறாராகக் கூறியுள்ளார்.
போரின் நோக்கம் குறித்து அவர் மேலும் விளக்குகையில், “நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஈரானுடன் மோதலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வாக, ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நான் நேரடியாக ஈடுபட விரும்புகிறேன். அமெரிக்காவை மீண்டும் ஒரு போருக்கு இட்டுச் செல்லாத, அதேசமயம் எங்களோடு இணக்கமாகச் செயல்படும் ஒரு தலைவரை ஈரானுக்கு உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானின் தற்போதைய அதிகாரக் கட்டமைப்பைச் சிதைத்து, அமெரிக்க நலன்களுக்கு உகந்த ஒரு புதிய ஆட்சியை அமைப்பதையே டிரம்ப் தனது இறுதி இலக்காகக் கொண்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அறிவிப்பு, ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
