ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு முக்கிய எரிசக்தி பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ‘ஜி-7’ நாடுகள் முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை உறுப்பு நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன.
ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, அமெரிக்கத் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களைத் தாக்கி வருவதால் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய ஜி-7 நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், “எங்களது நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கு எந்த இடையூறும் இல்லை; ஆனால், அமெரிக்காவிற்கு உதவும் நாடுகளின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும்” என அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் போர்க்கப்பல்களை அனுப்ப நட்பு நாடுகள் தயக்கம் காட்டுகிறது. மேலும் தனது நட்பு நாடுகளே போர்க்கப்பல்களை அனுப்ப மறுத்துவிட்டதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. குறிப்பாக, “இது எங்களது போர் அல்ல” என ஜெர்மனி போன்ற நாடுகள் வெளிப்படையாகக் கைவிரித்தது, ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
