உலகெங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மனிதாபிமானத்தின் உச்சமாக இந்தியா மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான கடுமையான மோதலில் சிக்கித் தவிக்கும் ஈரானுக்கு, இந்தியாவின் முதல் கட்ட மருத்துவ உதவித் தொகுப்பு வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது.
இதனைப் பெற்றுக்கொண்ட ‘ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி’, இந்திய மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. “இது வெறும் அரசு ரீதியிலான உதவி மட்டுமல்ல, இந்திய மக்களின் கருணை உள்ளத்தைக் காட்டுகிறது” என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது, இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர் போர்ச் சூழலால் ஈரானின் சுகாதாரக் கட்டமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை நிலவும் வேளையில், இந்தியா செய்துள்ள இந்த உதவி ஈரானுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்தியா ஏற்கனவே உலக நாடுகளுக்குத் தடுப்பூசிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி ‘உலகக் குரு’ (Vishwa Guru) என்ற பெயருக்குப் பெருமை சேர்த்து வரும் நிலையில், தற்போது போர்முனையில் தவிக்கும் ஈரானுக்கும் கைகொடுத்துள்ளது. இது வெறும் முதல் தொகுப்புதான் என்பதால், வரும் நாட்களில் மேலும் பல உதவிகளை இந்தியா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
