சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் போன்ற புவிசார் அரசியல் காரணங்களால், விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விமானத்தை இயக்குவதற்கான மொத்தச் செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது.
தற்போதைய விலை உயர்வு விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கத்தை ஈடுகட்ட விமான பயணக் கட்டணங்களை உயர்த்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 1-ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் விலைகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த திடீர் விலை உயர்வு கோடை விடுமுறை மற்றும் திருவிழாக் காலங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சில தனியார் விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விமானக் கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நீக்கியுள்ள நிலையில், தேவையைக் பொறுத்து கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடுத்தர வர்க்கப் பயணிகளின் பயணத் திட்டங்களை வெகுவாகப் பாதிப்பதோடு, சுற்றுலாத் துறையிலும் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
