தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் குதித்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இழுபறி நீடிக்கின்றன.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்து ஆலோசனைகளை நடத்தியும், வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்படவில்லை. “ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியல் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள நிலையில், பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறுமா என்பதே அக்கட்சித் தொண்டர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கட்சியின் மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலை தரப்போ கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகத் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அண்ணாமலை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. “நான் தேர்தலில் போட்டியிடாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட விரும்புகிறேன் என்று அவர் கட்சி மேலிடத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் அண்ணாமலையின் இந்தத் திடீர் முடிவால் அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க. தொண்டர்களும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எனினும், கட்சி மேலிடம் இதனை ஏற்குமா அல்லது அவரைப் போட்டியிட வற்புறுத்துமா என்பது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே உறுதியாகும்.
