இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), சிஏ இறுதித்தேர்வு (CA Final Exam) எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுவரை ஆண்டுக்கு மூன்று முறை (ஜனவரி, மே மற்றும் செப்டம்பர்) நடத்தப்பட்டு வந்த சிஏ இறுதித்தேர்வு முறை, இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும் என அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தின்படி, வரும் மே 2026 முதல் தேர்வுகள் மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே நடைபெறும். ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான தேர்வு கால அட்டவணைகள் இனி ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 2026-ல் நடைபெறவிருக்கும் தேர்வே பழைய முறையிலான கடைசித் தேர்வாகும்.
இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக ஐசிஏஐ தெரிவித்துள்ளது. தேர்வுகள் மிக நெருக்கமான இடைவெளியில் நடத்தப்படுவதால், மாணவர்கள் பாடங்களை முழுமையாகப் படித்துத் தயார் செய்யப் போதுமான நேரம் கிடைப்பதில்லை என்ற கருத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நிலவி வந்தது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த 2-முறை தேர்வு முறையினால், மாணவர்கள் மிகவும் திட்டமிட்டு படிக்கவும், தேர்வின் தரத்தை உயர்த்தவும் வழிவகை ஏற்படும். குறிப்பாக, மே 2026 தேர்வானது மே 2 முதல் மே 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ‘இன்டகிரேட்டட் பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ (Paper 6) என்ற தாள் மட்டும் 4 மணி நேரத் தேர்வாகவும், மற்ற தாள்கள் 3 மணி நேரத் தேர்வாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புகள் குறைந்துள்ளதால், மாணவர்கள் ஒரு முயற்சியைத் தவறவிட்டால் அடுத்த 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
