திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், மமகவின் மற்றொரு அமைப்பான தமமுகவின் பொதுச்செயலாளர் ஹாஜா கனி என்பவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கல்லூரி நிர்வாகம், அரசு ஊதியம் பெறும் பேராசிரியர், அரசியல் கட்சி பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சட்டத்திற்கு முரணானது என்றும், தேச விரோத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளது.
