டாடா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள டாடா தொழிற்சாலையில் ஏர்பஸ் சி-295 என்ற ராணுவ விமானம் தயாரிக்கப்படும் நிலையில், விமானத்தின் இறுதிக்கட்ட பணிகளை விமானப்படை துணைத் தளபதி ஏ.கே.பார்தி ஆய்வு செய்தார்.
ஏர்பஸ் சி-295 விமானம் நமது விமானப்படைக்கு மிகப்பெரிய பலம் என்றும், ஜம்மு-காஷ்மீர், லே, லடாக், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிக உயரமான மற்றும் கரடுமுரடான மலைப் பகுதிகளில் சிறப்பாக செயல்படக்கூடியது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 198 அடி வரையிலான மிகக் குறுகிய மற்றும் தார் இடப்படாத தற்காலிக ஓடுதளங்களில் கூட இந்த விமானத்தை தரையிறக்கவும், இயக்கவும் முடியும் என கூறியுள்ளனர்.
9.5 டன் எடையுள்ள சரக்குகள் அல்லது 70 வீரர்கள் அல்லது 48 பாராசூட் வீரர்களை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது என்றும், உளவுப் பணிகள், மருத்துவ அவசரநிலை மீட்பு, பேரிடர் நிவாரண பணிகளுக்கு உகந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மணிக்கு 482 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானம், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ந்து பறக்கும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
