இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடி கோதென்பர்க் நகரில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து கோதென்பர்க் நகரில் நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசியவர், இன்று, இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவுகள் ஒரு புதிய திருப்புமுனையை அடைந்திருப்பதாகக் கூறினார்.
வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கியப் பொருளாதாரமாக, இந்தியா இன்று ஒரு புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனக் கூறிய பிரதமர் மோடி, நமது இளம் மக்கள் தொகை, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்தார்.
இன்று, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பை இந்தியா கொண்டுள்ளது எனவும் நமது ஸ்டார்ட்அப்கள் செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், விண்வெளி, ட்ரோன்கள், உயிரி தொழில்நுட்பம், குற்றவியல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உலகளாவிய தீர்வுகளை உருவாக்கி வருகின்றன என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது ஸ்வீடிஷ் ஓபரா பாடகி Charlotta Huldt, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய புகழ்பெற்ற பக்திப் பாடலான “வைஷ்ணவ ஜன தோ” பாடலைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் நிலையான சிந்தனைகள் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன என கூறியுள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் கருத்துகள் அனைவரையும் சிறந்த உலகை உருவாக்க தூண்டட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்வீடிஷ் ஓபரா பாடகி பாடிய வைஷ்ணவ ஜன தோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் உயரிய, ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ் என்ற சிறப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ஒரு நாட்டின் உயரிய தலைமைக்கு வழங்கப்படும் மிக சிறந்த அங்கீகாரம் மற்றும் கவுரவமாக இந்த விருது கருதப்படுகிறது. இது உலகளவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 31-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.
