உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. பக்ரீத் நாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள், அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளிப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்றதை ஏழை, எளியவர்களுக்கு தானமாக வழங்குவர்.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மே மாதம் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி மாலை துல் ஹஜ் மாதத்துக்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லா மே மாதம் செவ்வாய்க்கிழமை 19ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
