நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், பொதுமக்கள் அனைவரும் இன்னும் ஓராண்டு காலத்திற்குப் புதிய தங்க நகைகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு அரசு பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எரிபொருள் சிக்கனத்தைஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த அதிரடி வேண்டுகோளைப் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமாக வழிமொழிந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கும் மோகம் மக்களிடையே சுமார் 50 சதவீதம் வரை பெருமளவில் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல், பொதுமக்கள் தங்களின்சொந்த வாகனப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டுப் பேருந்து, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் நாள் ஒன்றுக்குத் தலா 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல், டீசல் மிச்சமாவதாகக் கூறப்படுகிறது.
பாஜவினர் இந்த மாற்றத்திற்குப் பலத்த வரவேற்பு தெரிவித்து வரும் அதேவேளையில், நகை விற்பனை சரிவு குறித்த இந்தத் புள்ளிவிவரங்களை நகைக்கடை உரிமையாளர்களோ அல்லது தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினரோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
