சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதேபோல் வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்ற கொலிஜிய அறிவித்துள்ளது. மத்திய அரசின் பரிசீலனைக்கு பிறகு புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
