எதிர்காலப் போர்கள் வெறும் மனிதசக்தியை மட்டும் நம்பி இருக்காது என்றும், அவை தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தையே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அஹில்யாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ், விண்வெளித் தொழில்நுட்பம், சைபர் மற்றும் துல்லியத் தாக்குதல் ஆயுதங்களே இனிவரும் போர்களின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையும்.
மேலும் போர்க்களங்கள் இனி நிலம், நீர், ஆகாயம் மட்டுமின்றி சைபர் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய பன்முனைப் போர்களாக உருவெடுக்கும் என்பதால், நாட்டின் பாதுகாப்பு என்பது வீரர்களின் துணிச்சலுடன் நவீன தொழில்நுட்ப வலிமையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நவீன சவால்களை எதிர்கொள்ள உற்பத்தி திறனை அதிகரித்து, தங்களை விரைவாக தகவமைத்துக்கொள்ளும் நாடுகளே எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது இந்திய உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதும், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வலிமைக்குச் சான்றாகும்.
இந்நிலையில் தேசப் பாதுகாப்பு என்பது இனி வீரர்களின் வீரம் சார்ந்ததாக மட்டும் இருக்காமல், தொழில் திறன் மற்றும் புத்தாக்க வலிமையையும் சார்ந்ததாக இருக்கும் என்பதால், இந்தியா இத்துறை சார்ந்த வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேறி வருகிறது.
