தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது மாநாடு, சீன அறிவியல் கழகம் மற்றும் சீன பொறியியல் கழகத்தின் உறுப்பினர்கள் மாநாடு, சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சங்கத்தின் 11ஆவது தேசிய மாநாடு ஆகியவை ஜூலை 8ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நாட்டின் அதியுயர் அறிவியல் தொழில்நுட்ப விருதுகளைப் பெற்ற மூத்த அறிஞர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு முக்கிய உரை நிகழ்த்தினார். 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் வலிமையை கட்டமைப்பதற்கு திறவுகோலான காலக்கட்டமாகும். வரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி காலத்தின் சவால்களை எதிர்கொண்டு, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உயர்நிலை தற்சார்பு மற்றும் சுய வலிமையின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, 2035ஆம் ஆண்டுக்குள் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக மாறும் குறிக்கோளுடன் முன்னேறி, அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் மூலம் சீனாவின் நவீனமயமாக்கத்திற்கு ஆதரவளித்து வழிகாட்ட வேண்டும் என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்துறை மாற்றம், மனிதகுலத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையையும் உலக வளர்ச்சி கட்டமைப்பையும் மாற்றியமைக்கிறது. புதிய நிலைமைக்கும் புதிய தேவைகளுக்கும் இணங்க பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து, இதற்கான கட்சி மத்திய கமிட்டியின் பல்வேறு ஏற்பாடுகளையும் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
