நாட்டின் உயரிய பத்ம விருதுகளை, இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்.
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
நடப்பாண்டில் மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
இதில் பத்ம விபூஷண் விருது மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, முன்னாள் கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
பத்ம பூஷண் விருது நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அம்ரித்ராஜ், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உள்ளிட்ட 13 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
பத்மஸ்ரீ விருதுகள் நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, டாக்டர் எச்.வி.ஹண்டே, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உள்ளிட்ட 113 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
