தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் சில சட்டரீதியான தடைகள் உள்ளதால், மீதமுள்ள கடைகளை மூடும் பணிகள் ஒரே இரவில் நடந்துவிடாது என்றும், அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரவு 10 மணிக்குள் கடைகளை மூடுவதைக் கண்காணிப்பது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, காலி பாட்டில்களை பொதுவெளியில் வீசுவதைத் தடுக்கவே கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை கொண்டு வரப்பட்டதாகக் கூறிய அவர், சில கடைகளில் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளதை ஒப்புக் கொண்டார்.
இந்த ஸ்டிக்கர் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்றாலும், கூடிய விரைவில் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

