தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள், அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய சூழல் நிலவியது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய 4 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது.
எனவே, இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சபாநாயகரின் முடிவை எதிர்த்தும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் அதிமுக இந்த வழக்கைத் தொடுத்துள்ளதால், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சட்டப் போராட்டம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
