நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான பருவமழை நீண்ட கால சராசரியில் இருந்து 90 சதவீதமாக குறைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மத்திய, வடமேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மழைப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், குறிப்பாக ஜூன் மாத மழை பலவீனமாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தது.
இது கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் பெய்யும் மிகக் குறைந்த பருவமழையாக இருக்கலாம் என்றும் இதன் விளைவாக பயிர் விளைச்சல், உணவுப் பற்றாக்குறை மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் கூறப் பட்டிருந்தது.
எதிர்பார்த்தப் படியே இந்த ஜூன் மாதத்தில் இதுவரை நாடு முழுவதும் 92.2 மில்லிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இம்மாதத்திற்கான இயல்பான அளவான 157.7 மில்லிமீட்டர் விட மிகக் குறைவானதாகும்.
ஜூன் மாதத்தின் கடைசி நாளில் பரவலான மழை பெய்தாலும், இம்மாதத்தின் மொத்த மழைப்பொழிவு சுமார் 100 மில்லிமீட்டரை மட்டுமே எட்டியுள்ளது.
முன்னதாக 1927 முதல் 2026 வரையிலான காலகட்டத்தின் தரவுகளின்படி, 2009-ல் 87.5 மில்லிமீட்டரும் 2014-ல் 92.1 மில்லிமீட்டரும் மழைப் பதிவாகியுள்ளன.
இதைவிடவும் குறைவான மழையே இந்த ஜூன் மாதத்தில் பெய்துள்ளது. மத்திய இந்தியாவில் தான் அதிகபட்சமாக 54 சதவீத மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 41 சதவீதமும், வடமேற்கு இந்தியாவில் 30 சதவீதமும் தென்னிந்தியாவில் 28 சதவீதமும் மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் நான்கு மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்படுவது மிக அரிதான செயலாகும்.
‘எல் நினோ’ வின் தாக்கம் இந்தியாவின் பருவமழையைப் பாதிக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுவதாக வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால், ‘எல் நினோ’ ஏற்கனவே மிதமான தீவிரத்தை எட்டியுள்ளதாக அமெரிக்காவின் ‘காலநிலை மற்றும் சமூகத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.
வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் எல் நினோ உருவாக 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், இதனால் உலக அளவில் குறிப்பாக இந்திய வானிலையில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வெப்பமடைந்து வரும் உலகின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல உருவாகும் எல் நினோவை ஒரு அவசர காலநிலை எச்சரிக்கையாக உலகம் கருத வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜூன் 4 ம் தேதி கேரளாவில் பலவீனமாகத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, அதன்பிறகு படிப் படியாக வேகம் பெறாமல் குறைய தொடங்கியுள்ளது.
ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் தினசரி மழைப்பொழிவு, இதுவரை ஒரே ஒரு நாளில் மட்டுமே இந்தப் பருவக்காலத்துக்கான சராசரி அளவை தாண்டியுள்ளது.
இதற்கிடையே வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் சீரான மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தின் புவியியல் அமைப்பின் காரணமாக இந்தியாவின் பருவமழை 13 மில்லியன் ஆண்டுகளாக நீடித்து வருவதாக ஐஐடி பேராசிரியர் அனில் கே குப்தா தனது தொல் காலநிலை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் இந்தியாவில் பருவமழையை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை என்றாலும், எதிர்பாராத வெள்ளங்களையும் வறட்சிகளையும் கொண்டு வரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
