சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த படி பூஜையின் நிறைவு நாள் வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதப் பிறப்பையொட்டி மாதாந்திர பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி இரவு வரையிலான ஐந்து நாட்களும் தினமும் மாலை 7 மணிக்கு படி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒவ்வொரு படியிலும் வன தேவதையும், கிரகங்களும் வீற்றிருக்கும் தெய்வ அம்சம் நிறைந்ததாக கருதப்படுவதால், 18 படிகளும் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. ஒவ்வொரு படியிலும் நிலைவிளக்கும் கற்பூரமும் ஏற்றி, மந்திரங்கள் ஓதி சபரிமலை தந்திரி படி பூஜையை நடத்தினார்.
சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் ஐதீகமுள்ள படி பூஜையில் முன்பதிவு செய்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒருவருக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2040ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
