பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Estimated read time 1 min read

பழனியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி 136 ஆண்டுகளாக தர்மச் சொத்தாக இருந்து வந்த இடம் திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிலும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணை வரை சென்றுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தின் முழுப் பின்னணியைப் பார்க்கலாம்…

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தின் வேரைத் தேடிச் சென்றால், அது 1888-ஆம் ஆண்டை அடைகிறது.

பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியகாரர், தனது 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்யவும், இந்து தர்மத்தைப் பாதுகாக்கவும் தர்மசாசனமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தை பராமரிக்க மட்டுமே உரிமை உண்டு… விற்கவோ, வேறு யாருக்கும் மாற்றவோ உரிமை இல்லை என்பதும் அந்த தர்மசாசனத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த நிலம் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதி இரண்டு நபர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பத்திரப்பதிவை, அன்றைய பொறுப்பு சார்பதிவாளர் பதிவு செய்து கொடுத்ததும் சர்ச்சையை தீவிரப்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் கேள்வி எழுப்பின.

பழனி கோயில் நிர்வாகத்தின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முக்கியமான கேள்வி… பழனி கோயில் நிர்வாகம், இந்த நிலம் கோயில் கட்டுப்பாட்டில் இருப்பதால் பதிவு செய்யக் கூடாது என்று, பத்திரப்பதிவுக்கு முன்பே பதிவு அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

அப்படியிருந்தும்… எப்படி பத்திரப்பதிவு நடந்தது? அதுவும்…அரசு வழிகாட்டி மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலம், அதைவிட குறைவான மதிப்பில் பதிவு செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

இவை அனைத்தும் தற்போது விசாரணையின் மையக் கேள்விகளாக மாறியுள்ளன.

கடந்த சில தினங்களாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், சார்பதிவாளர் வீடு, பத்திரப்பதிவில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் வீடுகள், சாட்சிகளின் வீடுகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, பத்திரங்கள், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பலரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பழனி ஒரு கோயில் மட்டுமல்ல… கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துக்கள், தலைமுறைகள் கடந்தும் அந்த தர்ம நோக்கத்திற்காகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

அப்படிப்பட்ட ஒரு சொத்து குறித்து இவ்வளவு பெரிய சர்ச்சை எழுந்திருப்பது, பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பத்திரப்பதிவில் விதிமீறல் நடந்ததா… அல்லது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதா…? அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா…?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது சிபிசிஐடி விசாரணை. உண்மை என்ன என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பில், முருக பக்தர்கள் மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் காத்திருக்கிறது.

You May Also Like

More From Author