தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 70 ஆயிரத்து 485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 725 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2025-ம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 70 ஆயிரத்து 485 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. போலியான விண்ணப்பங்கள் மற்றும் தவறான சான்றிதழ்கள் கண்டறியப்பட்டால் அவை நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பதிவு செய்த நீட் தேர்வு விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
