தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமினை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொகுதி மறுவரை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி நடைபெறும்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் இரண்டு பேர் கலந்துகொள்வார்கள் .
அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம். ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான், சட்டமன்றத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்கள், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசு கண்டு கொள்வதில்லை என்பதால்தான் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்வது வேதனையளிக்கிறது.
பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சீமான் வீட்டின் முன்பு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாது. காவல்துறையினர் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.