சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் மாநகர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு எதிரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்து பேசினார்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. அதற்குள்ளாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள், 2 லட்சம் அரசு சார்பு பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதியில் சொன்ன , திமுக, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் சுமார் 78 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவுட் சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது அவுட் சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்ற நிலையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து விட்டது. பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நாங்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். பிரதான எதிர்க்கட்சித் தலைவரான என்னுடைய பேச்சு நேரலையில் ஒளிபரப்பபடுவதில்லை. பேச்சு முழுமையாக ஒளிபரப்ப பட்டால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்திற்கு போய்விடும். இதைபோன்றே, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களையும் சந்திப்பதே இல்லை. செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தாலும், கேள்விகள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, அந்த கேள்விகளை கேட்க மட்டுமே செய்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார். மக்கள் பிரச்சினைகளை செய்தியாளர்கள் கேட்டுவிட்டால் பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதால் முதலமைச்சர் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார். பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதற்கு பதிலடியாக தீவிரவாத முகாம்களை கண்டறிந்த இந்திய ராணுவமும் முப்படைகளும் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் விதமாக ராணுவம் எடுத்துள்ள முதல் கட்ட பணிக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.