டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இருப்பினும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறினால் பதிலடி வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது.
இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்தவுடன் முதல் அறிவிப்பாக ட்ரம்ப் தான் வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து வர்த்தக தொடர்புகளை நிறுத்தி விடுவேன் என சொன்னதால் இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், நேற்று பிரதமர் மோடி உரையாற்றிய போது கூட டிரம்ப் பற்றி எதுவும் பேசவில்லை.
இந்த சூழலில், போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து பிரதமர் மோதி தனது உரையில் எதுவும் தெரிவிக்கவில்லை ஏன் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் இந்திய முப்படைகளின் துணிவை வெகுவாகப் பாராட்டுகிறோம். ஆபரேஷன் சிந்தூரில் 35-40 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் IC-814 கடத்தல், புல்வாமா தாக்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், அதே சமயம் நான் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்கவும் விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாகக் கூறியுள்ளார். ஆனால், பிரதமர் மோதி தனது உரையில் (மே 12, 2025) இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பல முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற வேண்டும். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டாரா?
பாகிஸ்தானுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டதா? இது 1972 சிம்லா ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளதா? காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கு வழிவகுக்கப்பட்டதா?அமெரிக்காவின் தலையீடு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்கு வழிவகுக்கிறதா? இந்த கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லவேண்டும். அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.