சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நலம் கருதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஜூலை 22 மற்றும் 23) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின், ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
இந்த பயணத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், கோவில்வாழி மற்றும் வேலம்பாளையத்தில் புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கும், பொள்ளாச்சியில் காமராஜ், வி. சுப்பிரமணியம், மற்றும் ஜி. மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளை திறந்து வைப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் – 2041 தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவிருந்தார். ஆனால், அவரது உடல்நிலை காரணமாக இந்த சுற்றுப்பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையின்படி, முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது, மேலும் தேவையான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலின் தற்போது நலமாக இருக்கிறார் அவர் விரைவில் வீடு திரும்புவார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை அவர் மிகவும் நலமாகத்தான் இருக்கிறார். இன்று மாலை கூட அவர் வீடு திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். எனவே, முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து, தனது பணிகளை வழக்கம்போல தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.