பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களவையில் இன்று பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் குறித்த விவாதம் நடைபெற்றது . முன்னதாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் மக்களவையில் விளக்கம் அளித்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர், பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்? என்றும், பஹல்காமில் ஒரு மணிநேரமாக தாக்குதல் நடந்துள்ள நிலையில் அங்கு வீரர்கள் செல்லாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், “துணிச்சலான நமது வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கு யார் பொறுப்பு. டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பை கண்காணிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், உளவுத்துறை தலைவர் ராஜினாமா செய்வார்களா?. காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் உடனே கொல்லப்பட்டனர்.
இந்தியா-பாக். சண்டை நிறுத்தத்தை அறிவித்தது அமெரிக்க அதிபர் டிரம்ப்; ஒன்றிய அரசு அல்ல. நேரு, இந்திரா, சோனியா குறித்து பேசும் பாஜக அரசு, சண்டை நிறுத்தம் எப்படி வந்தது என பேச மறுப்பது ஏன்?. வெற்றியை கணக்கில் கொள்ளும் பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்காதது ஏன்? ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி குறித்து பேசும் ஒன்றிய அரசு, பாதுகாப்பு குறைபாடு குறித்து பேச மறுப்பது ஏன்?. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மக்கள் மற்றும் வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.