கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு சென்றனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கொடுத்து குரலுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா அணியினர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் மோதல் வெளிப்படையானது.
அதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நாள்தோறும் வந்து அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று அத்தாணி, சவுண்டப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த அதிமுகவினர் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதோடு, செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்தவர்களை வரவேற்ற கே.ஏ.செங்கோட்டையன், அனைவருக்கும் நன்றி தெரிவித்த பின்னர் ஜெயலலிதா ஆட்சி மலர எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி என்றார்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் தலைமையில் வந்த 50க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு 10,000 வாலா பட்டாசை வெடித்தும், உற்சாகமாக முழக்கமிட்டவாறு சென்று கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்தனர்.