பூமியின் சகோதரி கோள் என்று அழைக்கப்படும் வீனஸை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவிலும், மங்கள்யான் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலும் பெயர் பொறித்த இஸ்ரோ, அடுத்ததாக வீனஸ் என்றழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறது.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் என்ற பெயரில் ஆராய்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பூமிக்கு அருகில் அமைந்துள்ள கோளில், அதே போன்றதொரு சூழல் நிலவுகிறதா? என்பதை உறுதி செய்ய இத்திட்டம் வேகமெடுத்துள்ளது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு, நிலத்தடி மேற்பரப்பு, வளிமண்டல செயல்பாடு மற்றும் சூரியனின் தாக்கம் ஆகியவை குறித்து இத்திட்டத்தின் வாயிலாக அறிய முடியும்.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்காக மொத்த ஆயிரத்து 236 கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், அதில் 824 கோடி விண்கலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2028-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எல்விஎம் 3 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்படும் சுக்ராயன் 1 விண்கலம், 112 நாட்களுக்கு பிறகு வெள்ளி கிரகத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வீனஸ் S-பேண்ட் செயற்கை துளை ரேடார், வீனஸ் தெர்மல் கேமரா, வீனஸ் கிளவுட் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கருவிகளின் தொகுப்பை கொண்டிருக்கும் சுக்ராயன் 1 விண்கலம், வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் பிளாஸ்மா சூழலை ஆராய விஞ்ஞானிகளுக்கு உதவும்.
இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் என்னவென்றால்… வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலை செயல்பாடுகளை ஆராய்வதாகும்.
புவியை போன்றே ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் புவியின் “சகோதரிக் கோள்” என்று வீனஸ் அழைக்கப்படுகிறது. பூமியை நன்கு புரிந்துகொள்ள உதவும் பல தகவல்களை வெள்ளி கிரகம் தன்னுள் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாலும், சூரிய மண்டலத்தில், வாழக்கூடிய முதல் கிரகமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுவதாலும், இஸ்ரோவின் வீனஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சந்திரயான், மங்கள்யான் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ, வீனஸ் ஆர்ப்பிட்டர் மிஷனிலும் சாதிக்கும் போது, விண்வெளி துறையில் தன்னிகரில்லா இடத்தை உறுதி செய்யும். தற்போது ராக்கெட் ஏவுதல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோவின் ஒவ்வொரு நகர்வும் உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது
