திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ மற்றும் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸை, இந்த முறை 20 தொகுதிகளுக்குள் சுருக்க திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், தவெக போன்ற மாற்று சக்திகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸின் சில முக்கிய நிர்வாகிகள் திமுக-விற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த இழுபறியைத் தீர்க்க திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராகுலின் இந்த அதிரடி டிமாண்டால் திமுக தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
காங்கிரஸின் இந்த கோரிக்கையை ஏற்க திமுக முற்றிலும் மறுத்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்த ரகசிய சர்வே முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்றும், கூடுதல் இடங்களைக் கொடுத்தால் அது அதிமுக கூட்டணிக்குச் சாதகமாகிவிடும் என்றும் திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. டெல்லி தலைமை அதிக அழுத்தம் கொடுத்தால் மட்டும் ஓரிரு இடங்களை கூடுதலாக வழங்கலாம் என்பதே அறிவாலயத்தின் தற்போதைய முடிவாக இருக்கிறது.
தற்போதுள்ள சூழலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. ஒருபுறம் காங்கிரஸில் உள்ள சிலர் மாற்றுத் தலைமை நோக்கிச் செல்லலாம் எனக் கூறினாலும், மற்றொருபுறம் திமுக-விலும் ‘காங்கிரஸ் விலகினால் கவலையில்லை’ என்ற மனநிலையில் சிலர் உள்ளனர்.
இருப்பினும், தேர்தல் வெற்றியைப் பாதிக்காத வகையில் கூட்டணியைத் தக்கவைக்க இரு தரப்பிலும் உள்ள சமரச விரும்பிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இறுதியில் தொகுதிப் பங்கீடு என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
