அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற துபாய் நகரத்தில் இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டுமே தேவையான புதிய உணவுப் பொருட்கள் (Fresh Food) கையிருப்பில் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதால், கடல்வழி வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளின் 70 சதவீத உணவுத் தேவைகள் இந்த நீர்ச்சந்தி வழியாகவே இறக்குமதி செய்யப்படுவதால், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வான்வழித் தாக்குதல்கள் காரணமாக விமான சரக்கு போக்குவரத்து திறனும் 22 சதவீதம் வரை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இக்கட்டான சூழல் குறித்துப் பேசியுள்ள தளவாட நிபுணர்கள், துபாயில் புதிய உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பற்றாக்குறை நிலவுவதாகவும், தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உறைந்த உணவுகள் (Frozen Food) போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், மாற்றுப் பாதைகள் மூலம் விநியோகச் சங்கிலியைச் சீர்செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், போர் நீடித்தால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
