மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் நாடு அமெரிக்காவிற்கு மிகவும் மதிப்புமிக்க ‘பரிசு’ ஒன்றை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான இந்தப் பரிசு, உலக எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ரகசியப் பரிசின் முழு விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், அதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
“ஈரான் இன்று நமக்கு ஒரு பரிசை அனுப்பியுள்ளது. அது அணுஆயுதம் சார்ந்தது அல்ல; மாறாக எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்தது. இது மிகவும் பெரிய மற்றும் விலையுயர்ந்த பரிசு. ஈரான் மிகச் சரியான ஒரு காரியத்தைச் செய்துள்ளது,” என்று டிரம்ப் பாராட்டினார்.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியைப் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் முடக்கி வைத்திருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டதுடன், ஆயிரக்கணக்கான கப்பல்கள் நடுக்கடலில் தவித்தன. தற்போது ஈரான் வழங்கியுள்ள இந்தப் பரிசு, இந்தப் போக்குவரத்து முடக்கத்தை நீக்குவது தொடர்பானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், “ஈரான் இப்போது விவேகமாகச் செயல்படுகிறது. அவர்கள் ஒரு உடன்படிக்கைக்குத் தயாராக உள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் தெஹ்ரானில் உள்ள சரியான நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ போன்ற முக்கியத் தலைவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரான் இனி அணுஆயுதங்களை உருவாக்காது என்பதை அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. “நீங்கள் அணுஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதை நாங்கள் மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம், அவர்களும் அதற்குச் சம்மதித்துள்ளனர்,” என்றார் அவர்.
மேலு ம் இந்த ராணுவ நடவடிக்கை இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வருவதில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளதாக டிரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “இந்தப் போர் இவ்வளவு விரைவாக முடிய வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. ஆனால் நிலைமை இப்போது கட்டுக்குள் வந்துவிட்டது,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

