மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் சில மசோதாக்கள் குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.
அப்போது பிரதமர் மோடியின் உரையில் ஆற்றல் குறைந்து காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், திடீரென தனது அலைபேசியில் தேதியைப் பார்த்தபோது அது ஏப்ரல் 16-ஆக இருந்ததைக் கவனித்ததாகக் கூறினார்.
மேலும் “அனைத்துப் புதிருக்குமான விடை இந்த 16 என்ற எண்ணில்தான் இருக்கிறது” என அவர் ஒரு புதிரைப் போட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த 16-ன் பின்னணி என்ன என்பதை அறிந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடலாம் என்றும் அவர் சவால் விடுத்தார்.
இதனால் ராகுல் காந்தியின் இந்த மர்மமான பேச்சு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது ஒரு புதிர், இதற்கான பதிலை நான் அவ்வளவு எளிதில் சொல்லமாட்டேன்” என்று சிரித்தபடியே கூறிவிட்டுச் சென்றார்.
16 என்ற எண் எதைக் குறிக்கிறது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த ‘நம்பர் 16’ விமர்சனம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
